"முதல்வரின் முகவரி" தமிழக அரசாணை வெளியீடு - சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்
முதலமைச்சரின் மக்கள் குறைதீர்ப்பு துறைகளை முழுவதும் ஒன்றாக ஒருங்கிணைத்து "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் இந்த துறையின் கீழ் ஒரே துறையாகச் செயல்படும்.
முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு அரசாணையில் " முதல்வரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் " முதலமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறாா்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தனியாக துறை ஒன்றை ஏற்படுத்தி 100 நாட்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவிடுக